Friday, July 27, 2012

எசையனூர் சிவன் கோவில் கும்பாபிஷேகம்

Courtesy: Sri.Mayavaram Guru
பெரியவாளுடைய கைங்கர்யம் தவிர வேறு எதுவுமே தெரியாத மஹா ஸாது பக்தர்/பாரிஷதர், பெரியவாளுடைய திருவாக்கால் "பிரஹ்மஸ்ரீ" என்று அழைக்கப் பெற்ற பாக்யவான் ஸ்ரீ வேதபுரி மாமா.  அவருடைய சொந்த ஊர் எசையனூர். ஒருமுறை தன் கிராமத்துக்குப் போனார் வேதபுரி மாமா. அங்கு ஒரு புராதனமான சிவன் கோவில் ஒன்று உண்டு. அந்தக் கோவில் சிவாச்சாரியார் அவரிடம் "ஸ்வாமி........இந்த சிவன் கோவில் வர வர ரொம்ப சிதிலமாயிண்டு வரது. இன்னும் கொஞ்ச நாள் போனா, ப்ராகார சுவரெல்லாம் கூட இடிஞ்சு விழுந்துடும் போல இருக்கு. யாருமே இதை கவனிக்க மாட்டேங்கறா.........இந்த ஊர்ல இருக்கற பெரிய மனுஷா மனஸ் வெச்சா எல்லாம் நடக்கும்..........ஆனா, யாரும் முன்வரலை. எனக்கு என்ன தோணறதுன்னா...பெரியவா மனஸ் வெச்சா கும்பாபிஷேகம் பண்ணிடலாம். நீங்கதான் பெரியவாளோடையே இருக்கேளே! அவர் காதுல இந்த சமாச்சாரத்தை போட்டாக் கூட போறும். பெரியவா இந்த கோவிலைப் பத்தி ஒரு க்ஷணம் நெனைச்சாலே போறும் ஸ்வாமி" என்று ரொம்ப வருத்தப்பட்டு சொன்னார். 

வேதபுரி மாமாவுக்கோ ரொம்ப தர்மசங்கடமாகிவிட்டது. சொந்த ஊர் பிரச்சனையை பெரியவாகிட்டே போய் எப்படி சொல்ல முடியும்? எனவே தன்னால் இதில் ஒன்றும் பண்ணுவதற்கில்லை என்று ரொம்ப தயங்கி தயங்கி சொல்லிவிட்டு ஊர் திரும்பினார். அப்புறம் அந்த விஷயத்தைப்பற்றி சுத்தமாக மறந்தும் போய்விட்டார். 

ஆனால், "சிவமான" பெரியவாளுடைய "மஹா மனஸ்" வேதபுரி மாமாவை சீண்டிப் பார்க்க குறுகுறுத்தது! " ஏண்டா....வேதபுரி! என்ன? ஊருக்கு போயிட்டு வந்தியோ?" பாவம். அவருக்கு எதுவுமே தெரியாதாம்!

"ஆமாம் பெரியவா" சிவன் கோவில் விஷயம் வேதபுரியின் மனஸில் துளியும் ஞாபகம் இல்லை.

"ஓஹோ....சரி. அந்த சிவன் கோவில் சிவாச்சாரியார் ஒன்னண்டை எதாவுது சொன்னாரோ?"

மாமா ஆடிப் போய்விட்டார்! "சிவ சிவா" பெரியவாகிட்டே அதைப் பற்றி சொல்ல மறந்தே போய்ட்டோமே!" தன்னையே ரொம்ப நொந்து கொண்டார். கண்களில் நீர் வழிய, "க்ஷமிக்கணும். கோவில்  ரொம்ப க்ஷீணமா இருக்கு, யாருமே அதைப்பத்தி கவலைப் படறதா தெரியலை, பெரியவாதான் அனுக்ரகம் பண்ணணும்...ன்னு சொன்னார்"

ஏதோ புதுசாக கதை கேட்பது போல் கேட்டுக் கொண்டார். " சரி. நீ போயி ரெண்டு தபால் கார்டு எடுத்துண்டு வா! நான் சொல்றதை எழுது. எசையனூர் கிராமத்ல இருக்கற ரெண்டு பெரிய முக்யஸ்தாளுக்கு நான் சொல்றதை அப்டியே எழுது..........ஊர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பண்ண, ஊர்ல இருக்கறவாகிட்ட ஆளுக்கு பத்து பத்து ரூபாய்ன்னு வசூல் பண்ண ஆரம்பிச்சா..........எப்போ முடியுமோ, அப்போ கும்பாபிஷேகம் பண்ணலாம்...ன்னு நான் சொன்னதா எழுது" உத்தரவிட்டார். 

பெரியவாளுடைய உத்தரவாக தபால் போனதோ இல்லையோ, ஊர் தனவந்தர்கள்  காஞ்சிக்கு ஓடி வந்தனர் . அத்தனை நாள் அஸ்ரத்தையாக இருந்ததற்காக க்ஷமாபனங்கள் கேட்டுக் கொண்டனர். அதி சீக்கிரத்தில் கும்பாபிஷேகத்தை முடித்துவிடுவதாக வாக்களித்தனர். அதன்படியே  வெகுசீக்கிரத்திலேயே எசையனூர் சிவன் கோவில் கும்பாபிஷேகம் ஜாம்ஜாமென்று நடந்தது.

இதை சொல்லும்போதே வேதபுரி மாமாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது "எதை, எப்போ, எப்டி பண்ணணும்..ன்னு அந்த யோகமூர்த்திக்கு தெரியாதா?" என்றார்.

No comments:

Post a Comment