Thursday, May 24, 2018

Annadana hall aft tirumalai -spiritual dirty

திருவேங்கடவன் நடத்திய அற்புத லீலை

"மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா"  அன்னதான கூடம்"

திருமலையில் நித்ய அன்னதானம் மிகச்சிறப்பாக கோடானு கோடி பக்தர்களுக்கு  வயிறார  சாப்பாடு போடப்பட்டு வருகிறது.

ஆனால் ஒவ்வொரு  முறையும் பக்தர்கள் வரிசையில்  நின்று காத்திருக்க வேண்டிய நிலை ஏனெனில் முன் பந்தியில் குறைந்த அளவே மக்கள்
அமர்ந்து சாப்பிடும்  அளவில் மண்டபம் அமைந்து இருந்தது.

நம் கருணைக்கடல் திருவேங்கடவன் மெய் சிலிர்க்கும் ஓர் அற்புத நாடகத்தை நடத்தினார்.

ஒருநாள் மதியம் 2.00 மணி அளவில் திருமலை  E.O அலுவலகத்திற்கு
ஒருவர் வந்தார் .
அங்கிருந்த உதவி செயலாட்சி தலைவரிடம் 
அய்யா ஒரு வேண்டுகோள்
இங்கு ஸ்ரீனிவாசனை தரிசனம் செய்த பக்தர்கள்  அன்னதான கூடத்தில்
நீண்ட நேரம் காத்து இருக்கிறார்களே  கொஞ்சம் பெரிய மண்டபம் இருந்தால்
இன்னும் நிறைய பேர் சாப்பிட முடியும் அல்லவா  என்று கூறினார்.

அதற்க்கு அவர் நீங்கள் வரிசையில் நின்று சாப்பிட முடிந்தால் சாப்பிடலாம்
இல்லை என்றால் செல்லுங்கள் என்று சற்று கோபத்துடன் கூறினார்.

ஐயையோ ! நான் எனக்காக சொல்லவில்லை ஸ்ரீனிவாசனின் பக்தர்களுக்காகத்தான் கூறினேன் என்றார்.
அப்படி என்றால் நீங்களே ஒரு மண்டபம் கட்டி கொடுங்கள்  அதில்
நீங்கள் சொன்னபடி சாப்பாடு போடலாம் என்றார்.
உடனே அந்த பக்தர்  சரி புதிய அன்னதான கூடம் கட்டுவதற்கு என்ன செலவு ஆகும் என்றார்.
அந்த அதிகாரி மிகுந்த கோபத்துடன் ஓஹோ அப்படியா  ஒரு  25 கோடி
கொடுங்கள்  பெருசா  மண்டபம் கட்டி உங்கள் பெயரிலேயே சாப்பாடு போடலாம்  போய் வேலைய பாருங்க சார் என்றார்.
உடனே அந்த பக்தர் தான் வைத்திருந்த கைப்பையில் இருந்த காசோலை
புத்தகத்தை எடுத்து  25 கோடிக்கு ஒரே காசோலையாக 
திருமலை தேவஸ்த்தானத்தின்   பெயரில்  எழுதி அந்த அதிகாரியிடம்
கொடுத்தார்.
நினைத்து பாருங்கள் 25 கோடிக்கு ஒரே காசோலையை யாரேனும்
கொடுத்தால் நம்ப முடியுமா ?
ஆனால் அந்த உதவி செயலாட்சி தலைவர் வாயடைத்து போய்
மிகுந்த அதிர்ச்சியுடன்  வேர்த்து விருவிருக்க  விரைந்து சென்று
செயலாட்சி தலைவரை அழைத்து வந்து நடந்தவற்றை கூறினார்.
அவரும் ஆடிப்போனார்.
பின்னர் தாங்கள் யார் என்று மிகுந்த மரியாதையுடன் அவரை அமர வைத்து
கேட்டார்.
அவர்  அய்யா  நான் ஆரம்ப காலத்தில் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டபட்ட  குடும்பம் .
அப்படி இருந்தும் எழுமலை ஆண்டவன் மீது மிகுந்த பாசத்துடன் பக்தியும் வைத்து இருந்தேன் .
திருமலைக்கு ஒவ்வொரு  முறையும் நடந்தே வருவேன் தர்ம தரிசனத்தில்
எவ்வளவு  நேரம் ஆனாலும் என் அப்பன் ஏழுமலையானை  பொறுமையுடன்
தரிசனம் செய்து,  எனக்கு ஒருவழி  காட்டி நேர்மையுடன்   நான் வாழ ஒரு தொழில் வேண்டும் அதில் உனக்கு லாபத்தில் சரி பாதி  உன்னிடம் சேர்க்கிறேன் தந்தையே என்று  வேண்டி  பின்னர்  இலவச சாப்பாடு
வரிசையில் நின்று என் வயிறார நான் சாப்பிட்டு செல்வேன்.
பின்னர் நடைபாதை வழியாக மலையிறங்கி  வீட்டிற்கு செல்வேன்.

நாட்கள் செல்ல செல்ல பின்னர் என் தொழில் வளர்ச்சி அடைந்து இன்று மிகப்பெரிய  செல்வந்தனாக
இருந்தாலும் இது எல்லாம் என் அப்பன் எழுமலையான்  சொத்து.
இன்று வரை நான் தனியாகவே ஒவ்வொரு முறையும் நடந்தே மலைக்கு வந்து தர்மதரிசனத்தில் நின்று தரிசனம் செய்து அவருக்கு சேர வேண்டிய பங்கை உண்டியில் போட்டு விட்டு  அன்னதான கூடத்தில் வரிசையில் நின்று ஆனந்தமாய்  சாப்பாடு சாப்பிட்டு விட்டு செல்வேன் .

நீங்கள் பலமுறை தினசரி பத்திரிக்கையில் அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் உண்டியலில் இரண்டு கோடி ,மூன்று கோடி ஒரே பண்டிலாக
போட்டுள்ளார் என்று  செய்தி வெளியிட்டுள்ளீர்கள் .
அதை நான் தான் போட்டேன் . ஏனென்றால்  இதை  தேவஸ்தான அதிகாரி வாயிலாக  கொடுத்திருந்தால் என்னை மிகுந்த மரியாதை செய்து சிறப்பு தரிசனம் அளித்திருப்பார்கள் .

ஆனால்  அதை நான் விரும்ப வில்லை .
எந்த சூழ் நிலையிலும்  என்னுடைய தந்தைக்கும் எனக்கும் உள்ள
அந்த ஆரம்ப கால நினைவுகள் மாறிவிடக்கூடாது . 
இந்த பணம் என்னை என் பழைய வாழ்கையை மாற்றினாலும்  நான் என்னுடைய  நன்றியை  மறக்காமல் இன்றும் இருபத்து ஐந்து
வருடங்களுக்கு முன் நான் எப்படி திருமலைக்கு வந்தேனோ
அதை போலவே இன்றும் நடந்தே வந்து நடந்தே செல்கிறேன் .
என் நண்பர்களையோ என் உறவினர்களையோ நான் அழைத்து வந்தால்
அவர்கள் எண்ணப்படி நான் மாற வேண்டும் .
இவ்வளவு வசதி இருந்தும் நடந்து செல்வதா , தர்ம தரிசனத்தில் காத்து இருப்பதா இலவச சாப்பாட்டிற்காக வரிசையில் நிற்பதா என்று புலம்பி தள்ளுவார்கள்.
அதனால் தான் எப்பொழுதும் தனியாகவே வருவேன் .

இன்று தரிசனம் முடிந்து அன்னதான கூடத்தில் வரிசையில் நிற்கும் போது
நிறைய பேர் வரிசையில் காத்து நிற்பதை பார்த்து இன்று திடீரென
என் மனதில் இதை விட பெரிய மண்டபம் இருந்தால்  ஒரே நேரத்தில் நிறைய பக்தர்கள் அமர்ந்து  சாப்பிட முடியும் அல்லவா?
இந்த எண்ணத்தை என்னில் உருவாக்கியதும் என் தந்தை திருவேங்கடவன்  தான் .
அவர் சொல்ல சொல்ல  அவரை சுற்றி இருந்த அதிகாரிகளின் கண்களில்
நீர் அருவியாய் பெருகி பெருமாளின் லீலைகளையும் ,அவர் பக்தரின் பக்தியையும் பார்த்து வாயடைத்து அமைதியாய்  நின்றிருந்தனர் .
அந்த அறையில் மின் விசிறியின் சப்தம் மட்டுமே இருந்தது.   

பின்பு தான் அவர் ஆந்திரமாநிலத்தில் ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று
அறிந்து  ஆச்சர்யத்துடன்  அவரிடம் உங்கள் விருப்ப படி புதிய அன்னதான கூடம் கட்டி உங்கள் பெயரையே அதற்க்கு வைத்து விடலாம் என்றனர்.
வேண்டாம்! வேண்டாம் !  சாதாரண ஏழை என்னை செல்வந்தனாக வாழவைத்தது 
இந்த திருமலை அப்பனே இந்த பணம் என்னுடையதல்ல எழுமலையானுக்கு சொந்தமானது.

தேவஸ்தானம் விரும்பும் பெயரில் நடக்கட்டும் என்றதும்
அதிகாரிகள் மெய்சிலிர்த்து போனார்கள்.
ஒரே வருடத்தில் கட்டப்பட்ட இந்த  புதிய அன்னதான கூடம்
ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் அமர்ந்து  சாப்பிடும் அளவிற்கு கட்டப்பட்டு அதற்க்கு "மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா"  அன்னதான கூடம் என்று பெயரிடப்பட்டு உள்ளது . 
இது ஆசியாவிலேயே பெரிய அன்னதான கூடமாகும்.
இதை படிக்கும் போது நாமும் மெய்சிலிர்த்து போவோம்.

ஏடு கொண்டல வாடா...
வேங்கட ரமணா...
கோவிந்தா கோவிந்தா.

திருவேங்கடவன் திருப்பாதமே சரணம்.

#ஸ்ரீராமஜயம்

No comments:

Post a Comment